மண்டல பூஜை : டிச.22ல் தங்க அங்கி புறப்பாடு
சபரிமலை:மண்டல பூஜைக்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து டிச.,22 -ல் தங்க அங்கி பவனி புறப்படுகிறது.1973 - ல் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அங்கியை அணிவித்துதான் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.இதற்காக டிச.,22 அதிகாலை தங்க அங்கி பவனி ஆரன்முளாவிலிருந்து புறப்படுகிறது. நான்கு நாட்கள் பல்வேறு இடங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டு டிச.,25 மதியம் பம்பை வந்தடையும். அங்கிருந்து தலைச்சுமையாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்படும். அன்று மாலை 6:30 -க்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். டிச.,26 மதியம் நடைபெறும் மண்டல பூஜையிலும் மூலவர் இந்த தங்க அங்கியுடன் அருள்பாலிப்பார்.