பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததால் ஆண்கள் ஆத்திரம்!... இலவச திட்டங்களை யார் கேட்டது என ஆவேசம்
கர்நாடக காங்கிரஸ் அரசு அமைந்த போது, ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது. இதில் 'சக்தி' மற்றும் 'கிரஹ லட்சுமி' திட்டங்கள் முக்கியமானது. இவை இரண்டும் பெண்களுக்கானது. கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ், மாதந்தோறும் குடும்ப தலைவியருக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர்.சக்தி திட்டம் செயல்படுத்திய பின், அரசு பஸ்களில் பெண்களே அதிகம் பயணிக்கின்றனர். ஆண்களுக்கு இடம் கிடைப்பதில்லை. இந்த திட்டம் ஆண்களுக்கு பல விதங்களிலும் தொந்தரவாக உள்ளது. பெண்களை மட்டுமே குறி வைத்து திட்டங்களை வகுத்ததால், ஆண்கள் எரிச்சலில் இருந்தனர். 'பெண்கள் மட்டும்தான் காங்கிரசுக்கு ஓட்டு போட்டார்களா, நாங்கள் போடவில்லையா' என, கேள்வி எழுப்பி வந்தனர்.இதற்கிடையே மதுபான விலை அதிகரித்தது. இதனால் அவர்களின் கோபம் மேலும் அதிகரித்தது. 'கணவர்களின் பாக்கெட்டில் இருந்து பறித்து, மனைவிகளுக்கு அரசு கொடுக்கிறது' என, புலம்பினர்.இது போதாது என்பது போன்று, பொது மக்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மாநில அரசு நான்கு போக்குவரத்து கழகங்களின் பஸ் பயண கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தியது. 5ம் தேதி, அதாவது நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து, இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.சில ஊர்களில், கட்டண உயர்வு குறித்து தெரியாத ஆண்களிடம், நடத்துனர்கள் கூடுதல் பணம் கேட்டதால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் தத்தளிக்கும் மக்களுக்கு, பஸ் கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 'போக்குவரத்து கழகங்களின் பொருளாதார முன்னேற்றத்தை மனதில் கொண்டு, பஸ் பயண கட்டணத்தை உயர்த்திய அரசு, எங்களின் கஷ்டத்தை உணரவில்லை' என, ஆண்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இது குறித்து, சில ஆண்கள் கூறியதாவது:ஒரு பக்கம் இலவச திட்டங்களை செயல்படுத்தும் அரசு, மற்றொரு பக்கம் அதே மக்களின் பாக்கெட்டை காலியாக்குகிறது. பாம்பும் சாகக்கூடாது, கோலும் உடையக்கூடாது என்ற எண்ணத்தில், அரசு செயல்படுகிறது. நாங்கள் வாக்குறுதி திட்டங்களை தாருங்கள் என, மன்றாடினோமா. தேர்தலில் வெற்றி பெற, அக்கட்சியினருக்கு இலவச திட்டங்கள் தேவைப்பட்டன. இப்போது இவற்றை நீட்டிக்க, நாள், நட்சத்திரம் பார்க்கிறது.திட்டங்களுக்கு பணம் புரட்ட, கட்டணத்தை உயர்த்துவதை விட, வாக்குறுதி திட்டங்களை நிறுத்துவதே மேல். கடந்தாண்டு பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி அதிகரிக்கப்பட்டது. பால் விலை உயர்த்தப்பட்டது. இப்போது பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.அனைத்தையும் இலவசமாக கொடுப்பதாக, அரசு மார் தட்டுகிறது. ஆனால் விலை உயர்வு மூலம், மக்களிடமே பறிக்கிறது. இந்த லட்சணத்தில் திட்டங்கள் செயல்பட்டாலும் ஒன்று தான், நிறுத்தினாலும் ஒன்றுதான்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பா.ஜ., - ம.ஜ.த., ஆம் ஆத்மி, கே.ஆர்.எஸ்., விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், பஸ் கட்டண உயர்வை கண்டித்து, போர்க்கொடி உயர்த்தியுள்ளன.இது குறித்து, முதல்வர் சித்தராமையா கூறியதாவது:மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்திய போது, பா.ஜ.,வினர் பேசவில்லை. இக்கட்சியினர் பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லையா. ஐந்து ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.மாநிலத்தில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அரசில், குமாரசாமி முதல்வராக இருந்த போது, பஸ் பயண கட்டணத்தை உயர்த்தவில்லையா. இல்லை என, அவர் கூறட்டும் பார்க்கலாம்.போக்குவரத்து கழக பஸ்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியது, இதுவே முதன் முறையல்ல. அனைத்து அரசுகளின் காலத்திலும் உயர்த்தப்பட்டது. ஊழியர்கள் ஊதியம், டீசல் விலை உயர்வு, புதிய பஸ்களை வாங்குவது என, பல காரணங்களால் போக்குவரத்து கழகங்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. எனவே டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறுகையில், ''பஸ் பயண கட்டணத்தை, 15 சதவீதம் உயர்த்தியுள்ளனர். பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை அறிவித்து, ஆண்களுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். ஆண்கள் என்ன பாவம் செய்தனர்.''பெண்களுக்கு இலவச பஸ் பயணம், வீட்டின் குடும்ப தலைவியருக்கு கிரஹ லட்சுமி திட்டம் செயல்படுத்தினர். இதனால் ஆண்களுக்கு அநியாயம் நடந்துள்ளது. அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு ஆண்கள் ஓட்டு போடக்கூடாது,'' என்றார்.