ராஜஸ்தான் பாணியில் கோட்டை கட்டி தந்தவருக்கு ரூ.1 கோடி வாட்ச்
சண்டிகர்: ராஜஸ்தான் பாணியை பின்பற்றி, தனக்குரிய சொந்த நிலத்தில், பிரமாண்டமான கோட்டை கட்டித் தந்த ஒப்பந்ததாரருக்கு, பஞ்சாபை சேர்ந்த தொழில்அதிபர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ரோலக்ஸ்' கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினார்.பஞ்சாபை சேர்ந்தவர் குர்தீப் தேவ் பாத்; தொழிலதிபர். இவர், தனக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில், ராஜஸ்தானில் உள்ளதை போன்ற பிரமாண்ட கோட்டை கட்ட திட்டமிட்டார். இதற்கான ஒப்பந்தத்தை, பஞ்சாபின் ஷாகோட் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ராஜிந்தர் சிங் ரூப்ராவிடம் வழங்கினார். பின், கட்டடத்தை கட்டட கலைஞர் ரஞ்சோத் சிங் என்பவர் வடிவமைத்தார். இதன்படி, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் கோட்டை கட்டும் பணியை ஒப்பந்ததாரர் ராஜிந்தர் சிங் ரூப்ரா துவக்கினார். இடைவிடாது பணியாற்றிய அவர், இரு ஆண்டுகளில் ராஜஸ்தான் பாணியில் கோட்டையை கட்டி முடித்தார். இந்த பிரமாண்ட கோட்டையில், பெரிய அரங்குகள், தோட்டங்கள் உள்ளன. பணி முடிந்த பின், கோட்டையை பார்த்த தொழில்அதிபர் குர்தீப் தேவ் வியந்து போனார். தான் எதிர்பார்த்ததை விட கோட்டையை மிக பிரமாண்டமாக ஒப்பந்ததாரர் ராஜிந்தர் சிங் ரூப்ரா கட்டி தந்துள்ளதாக, அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.ராஜிந்தர் சிங் ரூப்ராவை கவுரவிக்கும் நோக்கில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 'ரோலக்ஸ்' கைக்கடிகாரத்தை தொழிலதிபர் குர்தீப் தேவ் பரிசாக வழங்கினார்.