| ADDED : நவ 20, 2025 08:37 PM
திருவனந்தபுரம்:சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான பத்மகுமார் கைது செய்யப்பட்டார். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் கருவறைக்கு முன்பாக உள்ள துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள், கடந்த 2019ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டன. தங்க முலாம் பூசிய பின், மீண்டும் தங்க தகடுகள் அணிவிக்கப்பட்டபோது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனை தொடர்ந்து,எஸ்ஐடிஎனப்படும் சிறப்பு புலனாய்வு குழு, பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்தது.குற்றம்சாட்டப்பட்டுள்ள முராரி பாபு, வாசு ஆகியோர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பத்மகுமாருக்கு முன்னதாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதை தொடர்ந்து அவர், இந்த மாத தொடக்கத்தில் இரண்டு முறை திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். இன்று சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.