| ADDED : ஜன 20, 2024 05:47 AM
ஆனேக்கல்: பெங்களூரு ஆனேக்கல்லில் தனியார் பள்ளிக்கு கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.பெங்களூரு, ஆனேக்கலின் பேடரஹள்ளி பிரதான சாலை அருகில் புனித ஆன்ஸ் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் வட மாவட்டம், வட மாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் என 25 பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.வழக்கம் போல் நேற்று காலை 7:00 மணிக்கு பணியை துவக்கினர். பள்ளியின் மத்திய கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் 15 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, எதிர்பாராத விதமாக அந்த தளம் இடிந்து விழுந்தது. இதை பார்த்த மற்ற கட்டடத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள், இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தனர்.இது தொடர்பாக மாநில பேரிடர் மீட்பு குழுவினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த படையினர், இடிபாடுகளில் சிக்கிய 11 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்ட்ரிங் பணி செய்து கொண்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சாஹித், 31, மினார் பிஸ்வாஸ், 30, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.இது தொடர்பாக போலீஸ் எஸ்.பி., மல்லிகார்ஜுனா கூறியதாவது:வழக்கம் போல் காலை 7:00 மணிக்கு இரண்டாவது தளம் கட்டும் பணியின் போது சென்ட்ரிங் இடிந்து விழுந்ததில், இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் ஆனேக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள இருவர், நிமான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.சிமென்ட் கான்கிரீட் போட்டவுடன் சென்ட்ரிங்இடிந்து விழுந்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவத்துக்கு அலட்சியமே காரணம் என்று தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.