பெங்களூரு: தர்மஸ்தலா பங்களாகுட்டா வனப்பகுதியில், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், எலும்புக்கூடுகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, மஞ்சுநாதா கோவிலில் வேலை செய்த, முன்னாள் துாய்மை பணியாளர் சின்னையா புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவினர், சின்னையா அடையாளம் காட்டிய 20 இடங்களில் சோதனை நடத்தினர். பெரிய அளவில் எதுவுமே கிடைக்கவில்லை. பொய் புகார் அளித்ததாக, சின்னையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பின்னால் இருந்து இயக்கிய, ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் ஜெயந்த், கிரிஷ் மட்டன்னவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சின்னையா நீதிமன்றத்தில் கொடுத்த மண்டை ஓடை, 2012ல் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா கொடுத்தது தெரிந்தது; அவரும் விசாரிக்கப்பட்டார். மண்டை ஓடை தர்மஸ்தலா பங்களாகுட்டா வனப்பகுதியில் இருந்து எடுத்து வந்ததாக அவர் கூறினார். அவரை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்தனர். பின், விட்டல் கவுடா வெளியிட்ட வீடியோவில், பங்களாகுட்டா வனப்பகுதியில் நிறைய எலும்புக்கூடுகள் பூமிக்கு மேல் இருப்பதை பார்த்ததாகவும், குழந்தையின் எலும்புக்கூடு இருந்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பங்களாகுட்டா வனப்பகுதியில் சோதனை நடத்த, வழக்கின் விசாரணை அதிகாரி ஜிதேந்திர குமார் தயமா தலைமையிலான குழுவினர், வனத்துறையினர், கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், துாய்மை பணியாளர்களுடன் நேற்று சென்றனர். தட்சிண கன்னடா உதவி கலெக்டர், பெல்தங்கடி தாசில்தாருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதுபோல விட்டல் கவுடாவையும் அழைத்துச் செல்லவில்லை. காலை 11:00 மணிக்கு துவங்கிய சோதனை மாலை 4:00 மணிக்கு முடிந்தது. சோதனை முடிந்து வெளியே வந்தபோது, பிளாஸ்டிக் சாக்குப் பைகளை கட்டி வெளியே எடுத்து வந்தனர். பிளாஸ்டிக் பைப்புகளும் எடுத்து வரப்பட்டன. சோதனையின்போது நிறைய எலும்புக் கூடுகள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எலும்புக் கூடுகளை பள்ளம் தோண்டி எடுக்கவில்லை என்றும் தரைக்கு மேல் இருந்து தான் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. எலும்புக் கூடுகளை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க எஸ்.ஐ.டி., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.