| ADDED : ஆக 10, 2025 02:43 AM
புதுச்சேரி:புதுச்சேரி அரசு மின்துறை மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை இணைந்து, வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதற்கான விழிப்புணர்வு முகாமை நடத்தியது. முத்தியால்பேட்டை, முருகன் மண்டபத்தில் நடந்த முகாமிற்க கண்காணிப்பு பொறியாளர் கணியமுதன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர்கள் ராஜஸ்ரீ, ஆல்வின், செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் திலகராஜ், சசிக்குமார், இளநிலை பொறியாளர்கள் செல்வமுத்தையன், செல்வராஜ், கார்த்திகேயன், அச்சுதானந்தன் ஆகியோர் பொதுமக்களக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுச்சேரியை பசுமை மாநிலமாக மாற்றுவோம் என்ற அடிப்படையில் நடந்த இந்த முகாமில், வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைத்த கொடுப்பது என்றும், வீட்டின் மீது சோலார் பேனல் அமைப்பதற்கு 6 சதவீதம் வட்டியில் தேசிய வங்கிகளில் எளிமையான முறையில் கடன் வசதிகள் ஏற்பாடு செய்து தந்து வருகின்றனர். அவ்வாறு அமைத்தால் ரூ. 78,000 மானியம் கிடைக்கும். சோலார் பேனல் மூலம் 3 கிலோ வாட் மின் உற்பத்தி நிலையம் அமைத்தால் வருடத்திற்கு 4,500 யூனிட்கள் மின் உற்பத்தி கிடைக்கும். வீட்டின் தேவைக்கு போக மீதம் உள்ள மின்சாரத்தை மின்துறை பெற்று கொண்டு, ஒரு யூனிட்டுக்கு ரூ.5.77 பைசா வீட்டின் உரிமையாளருக்கு வழங்கப்படும். ஐந்தாண்டிற்குள் முதலீட்டை திரும்ப பெறுவது எப்படி என, ஆலோசனைகளை வழங்கினர். அதன் அடிப்படையில் 6ம் ஆண்டு துவக்கம் முதல் 100 சதவீதம் மின்சாரம் இலவசமாகும். முகாமில், புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.