UPDATED : ஏப் 08, 2024 06:04 PM | ADDED : ஏப் 08, 2024 06:02 PM
புதுடில்லி: மத்திய அமைப்புகளை பா.ஜ., தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு முன்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி, டில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு முன்பு திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.,க்கள் குழு இன்று (ஏப்.,8) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. 24 மணி நேர தர்ணா போராட்டத்தை நடத்திய திரிணமுல் எம்.பி.,க்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டம் தொடர்பாக திரிணமுல் எம்.பி., டோலா சென் கூறியதாவது: எங்களுக்கு எதிராக மத்திய அமைப்புகளை பா.ஜ., தவறாக பயன்படுத்துகிறது. அந்த அமைப்புகள் திரிணமுல் காங்., தலைவர்களை குறிவைத்து செயல்படும் விதம் வெட்கக்கேடானது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான நிலைப்பாட்டை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறோம். என்.ஐ.ஏ., சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை தலைவர்களை மாற்ற தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். இந்த கோரிக்கையை முன்வைத்து 24 மணி நேர அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.