| ADDED : ஜன 18, 2024 02:15 AM
இம்பால்,மணிப்பூரில், பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த முகாம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், ரிசர்வ் படையைச் சேர்ந்த இருவர் வீரமரணம் அடைந்தனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே இடஒதுக்கீடு தொடர்பாக பெரும் கலவரம் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியாகினர்.இவ்விவகாரம் சற்று தணிந்திருந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று மணிப்பூரில் தெங்னோபால் மாவட்டத்தின் மோரே நகரில் மர்ம நபர்கள், பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தலைமறைவாகினர். இச்சம்பவத்தில் நான்கு பேர் பலியாகினர். இந்நிலையில், நேற்று அதே பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதுகாப்புப் படையினரின் முகாம் மற்றும் அவர்களின் வாகனங்களின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில், ரிசர்வ் படையைச் சேர்ந்த வாங்க்ஹெம் சோமார்ஜித் என்ற வீரர், வீரமரணம் அடைந்தார். இவர், மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தின் மாலோம் நகரைச் சேர்ந்தவர். தொடர்ந்து நடந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் ஒரு பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.முன்னதாக, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படக்கூடிய அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் நோக்கில், தெங்னோபால் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான மியான்மருக்கு அருகே மணிப்பூரின் மோரே நகரம் அமைந்துள்ளது. எனவே, இங்கு அந்நாட்டின் பயங்கரவாதிகள், நம் எல்லைக்குள் நுழைந்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.