எடியூரப்பா கையெழுத்தை விஜயேந்திரா போர்ஜரி? : எத்னால் புகார் அளித்தால் விசாரிக்க தயார் அமைச்சர் பிரியங்க் கார்கே அதிரடி அறிவிப்பு
கடந்த 2023 சட்டசபை தேர்தல் முடிந்த பின், கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, நளின்குமார் கட்டீல் மாநில பா.ஜ., தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு பசனகவுடா பாட்டீல் எத்னால், அரவிந்த் லிம்பாவளி, அசோக் உட்பட பலர் போட்டி போட்டனர்.ஆனால் பா.ஜ., மேலிடம், லிங்காயத் சமுதாயத்தினரை திருப்திபடுத்தும் நோக்கில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை மாநில தலைவராக நியமித்தது.அவரும் உற்சாகமாக கட்சி பணிகளில் ஈடுபட்டார். மாநில தலைவர் பதவி கிடைக்காமல் ஏமாற்றமடைந்த தலைவர்கள் எரிச்சலில் உள்ளனர். குறிப்பாக, மாநில தலைவராவோம் என்ற நம்பிக்கையில் இருந்து, ஏமாற்றமடைந்த பசனகவுடா பாட்டீல் எத்னால், எரிச்சலின் உச்சிக்கே சென்றுள்ளார்.விஜயேந்திரா பதவிக்கு வந்த நாளில் இருந்தே, அவருக்கு குடைச்சல் கொடுக்கிறார். எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை வசைபாடுவதையே, எத்னால் வழக்கமாக வைத்துள்ளார். காங்கிரசாரை விட சொந்த கட்சியின் எத்னாலே, பா.ஜ.,வுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறார். விஜயேந்திரா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். ஊழல்வாதி, தன் தந்தை எடியூரப்பாவை சிறைக்கு அனுப்பினார் என, எத்னால் குற்றம்சாட்டினார்.இதனால், கொதிப்படைந்த விஜயேந்திரா, சமீபத்தில் டில்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து, எத்னாலின் செயலை விவரித்து, அவரை கண்டித்து வைக்கும்படி வலியுறுத்தினார். மேலிட தலைவர்களும் எத்னாலை கண்டித்தனர். ஆனால், அதன்பின்னரும், எத்னால் பணியவில்லை. நேற்று முன்தினம் ஊடகத்தினர் சந்திப்பில், விஜயேந்திராவை கடுமையாக விமர்சித்தார்.'மாநில தலைவர் பதவிக்கு விஜயேந்திரா தகுதியானவர் அல்ல. தன் தந்தை முதல்வராக இருந்த போது, அவரது கையெழுத்தை போர்ஜரி செய்ததை, எக்காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது. எங்கள் கட்சி அதற்கு வாய்ப்பளிக்காது. கட்சி மேலிடம் இந்த விஷயத்தை தீவிரமாக கருத வேண்டும்.'விஜயேந்திரா செய்த தவறால், எடியூரப்பா சிறைக்கு செல்ல நேரிட்டது. வெளியே தன் மதிப்புக்குரிய தந்தை என்பார். வீட்டில் கிழவன் என, அழைப்பார். விஜயேந்திராவால் எடியூரப்பா பாழானார். இவருக்கு தன் வீட்டில் மதிப்பில்லை. மகன் மீதான மோகத்தை எடியூரப்பா கைவிட வேண்டும்' என கூறியிருந்தார். இது குறித்து, பெங்களூரில் அமைச்சர் பிரியங்க் கார்கே நேற்று அளித்த பேட்டி:பா.ஜ.,வில் நடக்கும் உட்கட்சி பூசல், எங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயமாகும். அதில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆனால், பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர், மாநில தலைவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இதை அரசு தீவிரமாக கருதுகிறது.எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அவரது கையெழுத்தை அவரது மகன் விஜயேந்திரா போர்ஜரி செய்ததாக, எத்னால் குற்றம் சாட்டியுள்ளார். இது, கடுமையான குற்றச்சாட்டாகும். விஜயேந்திரா ஊழல்வாதி. எடியூரப்பா சிறைக்கு செல்ல, விஜயேந்திராவே காரணம் என்றும், எத்னால் கூறியுள்ளார். இது குறித்து, எத்னால் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தால், விசாரணை நடத்த அரசு தயாராக உள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் சாதாரண விஷயம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.எடியூரப்பாவின் கையெழுத்தை, விஜயேந்திரா போர்ஜரி செய்ததாக எத்னாலின் குற்றச்சாட்டு, காங்கிரசாருக்கு அஸ்திரமாக அமைந்துள்ளது. எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அதிகாரிகள் இடமாற்றம் உட்பட பல விஷயங்களில் விஜயேந்திரா தலையிடுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.அந்த விஷயத்தை கிளறி, பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்கவும், காங்கிரஸ் முயற்சிக்கிறது. அதிகாரப்பூர்வமாக எத்னாலை புகார் அளிக்க வைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஒருவேளை எத்னால் புகார் அளித்தால், எடியூரப்பா தர்ம சங்கடத்தில் சிக்குவார். விஜயேந்திராவின் மாநில தலைவர் பதவிக்கும் ஆபத்து வரலாம். அதற்குள் பா.ஜ., மேலிடம் தலையிட்டு, எத்னாலை கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.