| ADDED : நவ 10, 2024 08:56 PM
லண்டன்: பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அளித்த தீபாவளி விருந்தில் இடம்பெற்ற உணவுகளுக்கு அந்த நாட்டில் வாழும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டனின் பிரதமராக இருந்த போது, முதல்முறையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இதைத் தொடர்ந்து, தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினார். 10 டவுனிங் ஸ்டிரீட்டில் உள்ள பிரதமர் இல்லத்தின் வாசலில் தீபங்களை ஏற்றி மகிழ்ந்தார்.தொடர்ந்து, பிரிட்டனில் உள்ள இந்து சமூகத்தினருக்கும், அதிகாரிகளுக்கும், எம்.பி.,க்களுக்கும் அவர் கொடுத்த தீபாவளி விருந்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் மத பண்டிகையாகக் கொண்டாடப்படும் தீபாவளிக்கான விருந்தில், மதுவும், மாமிசமும் வழங்கப்பட்டது அங்குள்ள இந்து சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்சைட் யூ.கே., எனும் இந்து சமூக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அளித்த தீபாவளி விருந்தில், மதுவும், மாமிசமும் விநியோகிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதப் பண்டிகையில் இதுபோன்ற உணவும், பானமும் வழங்கப்பட்டது அந்த விருந்தில் பங்கேற்ற இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி என்பது வெறும் பண்டிகையல்ல. இந்துக்களின் ஆழமான மத விழா. பக்தி மற்றும் தூய்மையின் வெளிப்பாடாகவே இது கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை குறித்து புரிதல் இல்லாமையே இந்த குளறுபடிக்கு காரணம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் முன்பு, கலந்து ஆலோசிக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.