எந்தத் துறையில் பணி வாய்ப்பு அதிகம்
உலகெங்கும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையின் தாக்கம் இந்தியாவிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த தாக்கத்தின் விளைவாக சில துறைகளில் புதிய பணி வாய்ப்புகள் வருவதில் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் எப்படிப்பட்ட மந்த நிலையிலும் சில துறைகள் வழக்கம் போல் பணி வாய்ப்புகளை வழங்குவதோடு அதிக வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. இந்தியாவில் வரும் 2013ல் எந்தெந்த துறைகளில் பணி வாய்ப்பு நன்றாக இருக்கும் என்பதற்கான ஆய்வை அசோசாம் அமைப்பு மேற்கொண்டு அதன் முடிவுகளைத் தந்துள்ளது. அவற்றை உங்களுக்காகவே தருகிறோம். ஹெல்த் கேர், ஹாஸ்பிடாலிடி, ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்.,( ஐ.டி., எனேபிள்டு சர்வீஸஸ்) துறைகளில் மட்டும் வரும் ஆண்டில் 16 லட்சம் புதிய பணி வாய்ப்புகள் உருவாகும் என்று அசோசாம் அமைப்பு கூறுகிறது. தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை இந்த நான்கு துறைகளையும், மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறைகளை பாதிக்காததே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தத் துறைகளில் ஹெல்த் கேர், ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., ஹாஸ்பிடாலிடி என்ற வரிசைப்படி பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் துறைகளின் ஒவ்வொரு நிலையிலும் பணி நியமனங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதும், கல்லூரிகளில் கூட இத்துறை சார்ந்த கேம்பஸ் இண்டர்வியூக்கள் முடிந்து விட்டதையும் இந்த அமைப்பு குறிப்பிட்டுக் கூறுகிறது. வரும் 6 முதல் 12 மாதங்கள் வரை இதே நிலை இந்தத் துறைகளில் நீடிக்கும்என்றும் கணிக்கப்படுகிறது. பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு நெருங்கிய தொடர்புடைய ஏவியேஷன், நிதி, ரியல் எஸ்டேட், டெக்ஸ்டைல்ஸ் ஆகிய துறைகளில் பொருளாதார மந்த நிலையின் தாக்கம் உணரப்படும் என்று கணிக்கப்படுகிறது. வரும் 201213ஆம் ஆண்டில் ஹெல்த் கேர் துறையில் 4.5 லட்சம் வேலை வாய்ப்புகளும், ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., துறைகளில் 3.8 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வளர்ந்து வரும் டூரிஸம் துறையில் ஒரு வருடத் திற்குள் 3.07 லட்சம் பணி இடங்களும், மீடியா மற்றும் பொழுது போக்குத் துறையில் 3.05 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.