உள்ளூர் செய்திகள்

நேர்முகத் தேர்வுகளுக்கான பாடி-லாங்வேஜ்

எத்தனை போட்டித் தேர்வுகள் வேண்டுமானாலும் எழுதி வெற்றி பெறலாம்... ஆனால் நேர்முகத்தேர்வு என்றாலே பயப்படும் நபர்கள் அதிகம் உள்ளனர். ஏன் நாமே இப்படி இருக்கலாம் அல்லவா? நேர்முகத் தேர்வில் ஒருவர் அறிந்திருப்பவற்றை விட, அவற்றை அவர் எப்படி வெளிக்காட்டுகிறார் என்பதில் தான் அவரது வெற்றிக்கான அடிப்படையே இருக்கிறது. அறிந்திருப்பவற்றோடு நமது பாடி லாங்வேஜ் எனப்படும் உடல் வெளிப்படுத்தும் குணங்களும் மிக முக்கியம்.   நேர்முகத் தேர்வு நடத்தப்படும் அறைக்குள் நுழைந்தவுடன் அங்கே அமர்ந்து நம்மை நேர்காணல் செய்யவிருக்கும் குழுவினருக்கு, குட்மார்னிங், குட் ஆப்டர்நுõன், குட்ஈவினிங் போன்ற முதல் வணக்கத்தைத் தெரிவிப்பது அவசியம். நாம் தெரிவிக்கவில்லையென்றாலுமே, அந்தக் குழுவினர் நமக்கு தெரிவித்து நம்மை ஈசியாக்குவதும் நேர்முகத் தேர்வில் நிகழ்கிறது. சிறப்பான பாடி லாங்வேஜ் தொடர்பாக சில தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. *முதன் முதலாக நேர்முகத் தேர்வுக் குழுவினரைக் காணும் போது, புன்னகைத்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும். புன்னகையானது இயல்பானதாகவும் மென்மையானதாகவும் இருக்க வேண்டும். குழுவினர் கை குலுக்கினால், அழுத்தமான மற்றும் உறுதியான கை குலுக்கலாக உங்களுடையதை வைத்துக் கொள்ள வேண்டும். * அமரச் சொல்லும் வரை காத்திருக்கலாம். அமரச் சொன்னவுடன் நன்றி கூறி அமர வேண்டும். * தளர்வாக உட்காருவது அவசியம். எனினும் நீங்கள் அமரும் விதம் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். உங்களது கைகளை இருக்கையின் கைகளில் வைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லாத போது, உங்களது இடுப்பின் மேல் இருப்பது போல அவற்றை வைத்துக் கொள்ளலாம். உங்களது கால்கள் தரையில் நன்றாகப் பதியும் வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வுக் குழுவினரை நோக்கி லேசாக முன்புறம் நீங்கள் சாயலாம். ஆனால் இதில் கவனம் தேவை. நன்றாக நிமிர்ந்து உட்காருவதே நல்லது. * தலைமுடியில் கைகளை அலைய விடுவது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. அதேபோல பேன்ட் அல்லது சட்டைப் பைகளிலும் கைகளை நுழைக்கக் கூடாது. * நேர்முகத்தேர்வுக் குழுவினரை நேரடியாகக் கண்ணோடு பார்த்துப் பேச வேண்டும். வெறித்துப் பார்க்கக் கூடாது. * ஒருவருக்கு மேல் நேர்முகத் தேர்வுக் குழுவினர் இருந்தால், யார் கேள்வியை கேட்டாரோ அவரைப் பார்த்துப் பேச வேண்டும். பிறரிடமும் உங்களது பார்வை சென்று வரலாம். * உங்களது கைகளை தேவைக்கு அதிகமாக அசைத்துப் பேச வேண்டாம். அதற்காக கைகளை அசைக்காமல் எந்திரன் போலவும் பேச வேண்டாம். * நேர்முகத் தேர்வுக் குழுவினர் பேசும் போது லேசாக தலையை அசைத்து கவனிப்பதை உணர்த்தலாம். இது இயல்பாக இருக்க வேண்டும். * கால்களை குறுக்காகப் போட்டு அல்லது பைலை முகத்திற்கு எதிரே வைத்து அல்லது முழங்கால்களில் சூட்கேசை வைத்து கவனத்தை மறந்து கூட திருப்ப வேண்டாம்.  பயப்படுவது போலவும் காட்சியளிக்க வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !