உள்ளூர் செய்திகள்

அரசு வேலைக்கு மீண்டும் வருகிறது மவுசு

ஆமதாபாத்: ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை சம்பளம் பேசி வேலைக்கு மாலை போட்டு வரவேற்ற காலம் போயேபோச்சு; அரசு வேலைக்கே கிராக்கி வந்துவிட்டது இப்போது. இந்தியாவில், மேலாண்மை கல்வியில் சாதிப்பது மட்டுமின்றி, சர்வதேச நிறுவனங்களில் வேலைவாய்ப்பு  பெற்றுத் தருவதிலும் உச்சகட்ட கவுரவத்தை பெற்றிருந்த ஆமதாபாத் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில் தான் இந்த நிலை. மேலாண்மை கல்வியை சொல்லித்தருவதில் உயர்மட்ட கல்வி நிறுவனம், ‘இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்’ ( ஐ.ஐ.எம்.,)க்கு எப்போதும் அதிக மவுசு உண்டு. இதில் சீட் கிடைப்பதே மிகவும் அரிது. மிக அதிக அறிவுக்கூர்மை உள்ள மாணவர்கள் மட்டுமே சேர முடியும். இதில், படித்து எம்.பி.ஏ., முடிக்கும் போதே, உள்நாட்டு, வெளிநாட்டு பிரபல நிறுவனங்கள் பல லட்சங்களை சம்பளமாக அளிக்க ஒப்புக்கொண்டு மாணவர்களை கொத்திக் கொண்டு போவதும் வழக்கமான ஒன்று தான். ஆனால், கடந்த ஆண்டோடு இந்த பரபரப்பு ஓய்ந்து விட்டது. சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து மீளாத பன்னாட்டு நிறுவனங்கள் மிகவும் சோர்ந்து விட்டன.  ஏற்கனவே உள்ள ஊழியர்களை நீக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதிக சம்பளம் தந்து புதிய எம்.பி.ஏ.,க்களை வேலைக்கு எடுக்க  முடியாத நிலை. அதனால், கடந்தாண்டு வந்த சர்வதேச நிறுவனங்களில் பாதி கூட இந்தாண்டு ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,க்கு வரவில்லை. அப்படியே வந்த லேமென் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச் போன்ற சில நிறுவ னங்கள்,  கடந்தாண்டை விட பாதிக்கு பாதி சம்பளம் நிர்ணயித்தே சில  மாணவர்களை ‘பிளேஸ் மென்ட்டில்’ எடுத்தன. அதே சமயம், அரசு துறை நிறுவனங்களுக்கு அதிக மவுசு கிடைத்தது. வேலை உத்தரவாதம் இருப்பதால், அரசு  வங்கிகள்,  பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பை தந்தபோது, அதை மாணவர்கள் தட்டாமல் ஏற்றுக் கொண்டனர். கடந்த ஆண்டு, வெளிநாட்டு நிறுவனங்கள், மாணவர்களுக்கு ஆண்டு சம்பளம்  80 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை அளிக்க முன்வந்தன. ஆனால், இந்த முறை வந்த நிறுவனங்கள் 55 லட்சம் ரூபாய்  வரை தான் அளிக்க முன்வந்தன. அதுவும், ஒரு சில மாணவர்களுக்கு தான். அரசு துறை நிறுவனங்கள், வங்கிகள் தேர்வு செய்த மாணவர்களுக்கு அதிகபட்சம் 12 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு இதைவிட குறைவாகத்தான் குறிப்பிட்டு வேலைக்கு எடுக்கப்பட்டனர். ஆனாலும், திருப்தியுடன் வேலைவாய்ப்பை  அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அரசுக்கு சொந்தமான யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா உட்பட சில வங்கிகள் சார்பில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. அரசு துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் சில மாணவர்களுக்கு வேலை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !