புத்துயிர் பெறவுள்ள உயர்கல்வித் துறை
உயர்கல்வித் துறையானது புத்துயிர் பெறவும் உத்வேகம் பெறவும் உதவும் வகையில் பேராசிரியர் யஷ்பால் தலைமையில் உயர்கல்வி புத்தாக்கக் குழு ஒன்று சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவானது உயர்கல்வித் துறையின் மேம்பாடு குறித்த தனது அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் முக்கிய சாராம்சங்கள் இவை தான்... * அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இருக்கும் இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துவக்கத்தில் நாட்டிலுள்ள 1500 கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாக மேம்படுத்துவது அவசியம் என இந்தக் குழு தெரிவித்துள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழக இணைப்பு முறை ஒழிக்கப்பட்டு இந்தக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக செயல்படும் ஆரோக்கியமான நிலை ஏற்படும். * பல பல்கலைக்கழகங்களின் செயல்திறன் குறைபாட்டிற்கு அதிக அளவிலான கல்லூரிகள் அவற்றுடன் இணைக்கப்பட்டதே முக்கியக் காரணமாக உள்ளது. * தற்சமயம் இந்தியாவில் 20 ஆயிரம் கல்லூரிகள் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளன. இதனால் கல்விப் புலம், பாடப்பகுதிகள், தேர்வுகள் போன்ற பல அம்சங்களால் பல்கலைக்கழகங்களின் சுமை பெருமளவு அதிகரித்து வருகிறது. இதனால் சிறந்த கல்வி நிறுவனங்கள் பிரச்னைகளுக்கு உள்ளாகியிருப்பதுடன் படைப்பாற்றல் திறன் என்ற அம்சத்தின் முக்கியத்துவம் படிப்படியாக புறந்தள்ளப்பட்டுள்ளது. * பல்கலைக்கழகங்களின் சுமையைக் குறைக்க பல்வேறு யோசனைகளை இக் குழு தந்துள்ளது. இவற்றுள் தகுதி வாய்ந்த 1500 கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தும் யோசனையே முதன்மையாக உள்ளது. இந்த யோசனையை வெற்றிகரமாக செயல்படுத்த தேசிய உயர்கல்வி மற்றும் ஆய்வுக் குழுவான என்.சி.எச்.இ.ஆர்., தந்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவது எனவும் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. * பல்வேறு கல்லூரிகளை ஒரு குழுமமாக இணைத்து அதைத் தனிப் பல்கலைக்கழகமாக நடத்தவும் யஷ்பால் குழு பரிந்துரைத்துள்ளது. தரம் வாய்ந்த கல்லூரிகளுக்கு தன்னாட்சி தருவதன் மூலமாக அவற்றின் படிப்புகளையும் தேர்வுகளையும் அந்தந்த கல்லூரிகளே நடத்திடவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலித்து விரைவில் மாற்றங்களை உயர்கல்வித் துறையில் ஏற்படுத்திவிடும் என்ற நம்பிக்கை கல்வியாளர்கள் மத்தியில் உள்ளது.