மேலாண்மை படிப்புகள் தரமானதாக இருக்கிறதா?
கல்வி என்பது கனிகள் எங்கு இருக்கிறது என கண்டுகொண்டு அவற்றை எப்படி எல்லாம் பறிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்வதை விட நாமே மரத்தை வளர்த்து, கனிகளை எல்லா காலமும் எளிதாக பெறும் முறையை கற்றுக்கொடுப்பதே சிறந்த கல்விமுறையாக இருக்க முடியும். தற்பொழுது எம்.பி.ஏ. கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வது குறைந்து வருகிறது. ஏனெனில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு கல்லூரிகளை நடத்தி வருவதும், சரியாக கற்றுத்தராத கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளை மாணவர்கள் படித்ததனால் வேலைவாய்ப்புகளை எளிதாக பெற முடியாததும் இதற்கு முக்கிய காரணங்களாகும். மேலாண்மை படிப்புகளுக்கு முன்னதாக எம்.சி.ஏ. மற்றும் பார்மசி படிப்புகளுக்கு மாணவர்கள் முன்னுரிமை அளித்து வந்தனர். இப் படிப்புகளுக்கான மோகம் குறைந்து வருவதை அறிந்தவுடன் பல கல்லூரிகள் இப்படிப்புகளை கற்றுத்தருவதை நிறுத்திவிட்டன. இது போன்ற நிலைமை தான் தற்பொழுது எம்.பி.ஏ. அளிக்கும் கல்லூரிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. மேலாண்மை படிப்புகளை எங்கு படிக்கலாம்? என மாணவர்கள் கல்லூரிகளைத் தேடினால் வணிகப்பள்ளிகளின் விபரங்கள் மட்டும் கிடைப்பதில்லை. பொறியியல் கல்லூரிகளின் விபரங்களும் இணைந்தே கிடைக்கிறது. மேலாண்மை படிப்புகளின் தரம் குறைந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம். பொறியியல் படிப்புகளையே பள்ளிக்கூடங்களைப் போன்று நடத்தும் கல்லூரிகள், மேலாண்மை படிப்புகளையும் அது போன்றே அளிக்கின்றன. எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்களில் ஒரு பிரிவினரும் வெறும் பட்டம் என்ற பார்வையிலேயே இதனை பார்க்கின்றனர். இதனைப் புரிந்து கொண்ட ஒரு சில கல்லூரிகள் இது போன்ற மாணவர்களுக்கு ஏற்றவாறு சலுகைகளை அள்ளித் தந்து மாணவர்களை ஈர்க்கின்றனர். படிக்கும் மாணவர்கள் போதுமான வருகைப் பதிவு இல்லாமல் தேர்வுக்கு மட்டும் வரும் நிலையே பல இடங்களில் காணப்படுகிறது. இந்த நிலை மாறி மேலாண்மைத் துறையில் இந்திய மாணவர்கள் சாதிக்க வேண்டுமானால் சில மாற்றங்களை நம் கல்வித் துறை ஏற்படுத்த வேண்டும், அப்படி ஏற்படுத்தினால் தான் எதிர்காலத்தில் நம் மாணவர்கள் திறமையான நிர்வாகிகளாவர். திறமையான நிர்வாகிகளால் நிறுவனங்கள் சிறப்பாக வளரும், நிறுவனங்கள் வளர்ந்தால் நாடும் வளர்ச்சி காணும். திறமையான நிர்வாகிகளை உருவாக்குவதற்கு பெரும்பாலான மேலாண்மை கல்லூரி நிர்வாகத்தினர் முதலீட்டுக்கு தகுந்தவாறு அதிரடி வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். இந்த எண்ணங்களை நிர்வாகத்தினர் மாற்ற வேண்டும். மேலாண்மை பாடப்பிரிவுகள் மற்றும் நிர்வாகக் கல்வி ஆகியவை பொறியியல் படிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதனால் பொறியியல் கல்லூரிகளில் மேலாண்மை கற்றுக் கொடுப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். நிகழ்கால நிலவரங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். பாடப் புத்தகங்களுக்கும், நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். புதிய திட்டங்கள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டங்களை அமைப்பதற்கு முகியத்துவம் அளிக்கவேண்டும். தொழில்துறை சர்ந்த அனுபவங்களை படிக்கும்பொழுதே மாணவர்கள் பெறுவதற்கு துணைபுரிய வேண்டும். மாணவர் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட, அளிக்கப்படும் கல்வியின் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ. மேலாண்மை கல்லூரிகள் மேல் தனது மேற்பார்வையை அதிகப்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பட்டதாரிகளை உருவாக்குவதை தவிர்த்து, வேலை பெறும் அல்லது வேலையை உருவாக்கக்கூடிய நபர்களாக மாணவர்களை தங்கள் நிறுவங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் "கல்வி என்பது காலியான பாத்திரத்தை நிரப்பும் திரவமல்ல, அண்ட வெளியெங்கும் புது வெளிச்சத்தை உருவாக்கும் நெருப்பு".