சென்னை அடுத்து காளாஞ்சிபட்டியிலே அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
ஒட்டன்சத்திரம்: சென்னைக்கு அடுத்தபடியாக ஒட்டன்சத்திரம் தொகுதி காளாஞ்சிபட்டியில் தான் தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த இலவச போட்டி தேர்வு மையம் செயல்படுகிறது என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில நாள் விழா, 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கிய அவர் பேசியதாவது:சென்னைக்கு அடுத்தபடியாக ஒட்டன்சத்திரம் தொகுதி காளாஞ்சிபட்டியில் தான் தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த இலவச போட்டி தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளுடன் சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும், மத்திய அரசு நடத்தும் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற இளைஞர்கள் இங்கு சேர்ந்து படித்து பயன்பெற வேண்டும் என்றார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், பாலு, தங்கம், பொன்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.