உள்ளூர் செய்திகள்

இடிந்து விழக்கூடிய பள்ளி கட்டடம் - மாணவர்களுக்கு மாற்று இடம் எப்போது?

ஈரோடு: இடிந்து விழ காத்திருக்கும், அரசு பள்ளி கட்டிடத்தில் உள்ள மாணவர்களுக்கு உரிய இடம் ஒதுக்க, கல்வி அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்திருக்கின்றனர். ஈரோடு, பெரியார் வீதியில், அரசு துவக்க பள்ளி 1911ம் ஆண்டு முதல் செயப்படுகிறது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான இங்கு, 250 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். ஓட்டு கட்டிடத்தினால் ஆன வகுப்பறைகள் உள்ளன. பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படுகிறது. கடந்தாண்டை விட, 70 பேர் அதிகமாக, இந்தாண்டு சேர்ந்துள்ளனர். சேதமடைந்துள்ள ஓட்டு கட்டிடத்தில்தான், ஆங்கில வழி வகுப்புகள் 1-ஏ, 1-பி, 2-ஏ, 2-பி, தமிழ் வழி வகுப்புகள் 1, 2ம் நடக்கிறது. ஆபத்தான நிலையில் கட்டிடம் உள்ளது. இப்பகுதியில் மாணவ, மாணவியர் மட்டுமின்றி, பெற்றோர்களும் நடக்கக்கூடாது. பலத்த காற்று, கன மழைக்கு தாக்குப் பிடிக்காது. பள்ளி குழந்தைகளை வேறு கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என, தள ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரி, ஒரு மாதத்துக்கு முன்னரே ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளார். ஆனால், இன்னும் வகுப்புகள் அங்கு செயல்படுகிறது. கன மழை காலம் விரைவில் துவங்க உள்ளது. எப்போது எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழக்கூடும். அசம்பாவிதம் நடக்கும் முன்னரே, நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்வி குழு, பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி மல்லிகா(துவக்க பள்ளிகள்) கூறியதாவது: பொதுமக்களுக்கு இதுபற்றி தெரியாது. கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி சான்று வழங்கியுள்ளார். மாணவர்களை வேறு கட்டிடத்தில் அமர வைப்பது குறித்து, அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருகில் உள்ள கட்டிடத்துக்கு, மாணவர்கள் மாற்றப்படுவர். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும், என்றார். இறுதி முடிவு எடுக்க வேண்டியது எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ.,தான். அவரது உத்தரவுக்காக காத்திருப்பதாக, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். எனினும், பள்ளியில் உள்ள எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகங்களை இடமாற்றம் செய்தால் மட்டுமே, அங்கு மாணவ, மாணவியரை அமர வைக்க முடியும். மாற்றத்துக்கான உத்தரவு வழங்கினாலும் கூட, கால தாமதம் ஆகும் என்பதால், பள்ளி நிர்வாகத்தினர் கவலை அடைந்துள்ளனர். விடுமுறை முடிந்து, இன்று முதல் மீண்டும் பள்ளி வகுப்புகள் நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்