ஓய்வுக்குள் பதவி உயர்வு வந்துவிடாதா? - மன உளைச்சலில் தலைமையாசிரியர்கள்
மதுரை: ஓய்வு பெறுவதற்குள் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி உயர்வு வந்து விடாதா, என தலைமையாசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உட்பட மாவட்ட கல்வி அலுவலர் அந்தஸ்தில், மாநிலத்தில் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப தலைமையாசிரியர்கள் பணி மூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் கல்வித்துறை வட்டாரங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. இவற்றை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பதவி உயர்வு பட்டியலிலுள்ள 46 தலைமையாசிரியர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு, ஆக.,11 முதல் 23ம் தேதி வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்து பல நாட்களாகியும் பதவி உயர்வு அறிவிப்பு குறித்து அறிகுறிகள் இல்லை. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளில் ஓராண்டாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் தலைமையாசிரியர்களால் கல்விப் பணி பாதித்துள்ளது. பலர் ஓய்வை நெருங்குகின்றனர். கடந்த மாதம் இப்பட்டியலில் உள்ள 3 பேர் ஓய்வு பெற்றனர். இம்மாதம் கடைசியில் சிலர் ஓய்வு பெறவுள்ளதால் மன உளைச்சலில் உள்ளனர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக பொதுச் செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு திட்டங்களை வழங்குவது, ஆய்வுகள் செய்வது என முக்கிய கடமைகள் உள்ளன . இப்பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து இயக்குனரிடம் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பணியிடங்களை நிரப்பினால் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும் என்றார். 32ல் 25 பொறுப்பு: மாநிலத்தில் 32 மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களில் 25 இடங்களை மூத்த தலைமையாசிரியர்கள் கூடுதல் பொறுப்புகளாக கவனிக்கின்றனர். நிர்வாகம் மற்றும் ஆய்வு பணிகளை அவர்கள் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக புலம்புகின்றனர்.