உள்ளூர் செய்திகள்

அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள் சிறப்புச் சலுகை மூலம் பொதுத்தேர்வு எழுத அனுமதி

தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி பிளஸ் 2; மார்ச் 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. மாணவ, மாணவியரின் ஹால் டிக்கெட் கள், தேர்வுத்துறை இயக்குனரக இணையதளம் மூலம் வினியோகிக்கப்படுகின்றன. ஒருசில தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பதிவெண் பட்டியல் வழங்கவில்லை; ஹால்டிக்கெட் வழங்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதையொட்டி, சில தனியார் பள்ளி நிர்வாகிகள் தேர்வுத் துறை இயக்குனரகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறையில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: பெரும்பாலான தனியார் பள்ளிகள் அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்று விட்டன. ஒருசில பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல் நிலைக்குத் தரம் உயர்த்தும்போது, அங்கீகாரத்துக்காக, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத் துறையில் மனு செய்துள்ளன. இதில், ஒருசில பள்ளிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்ததால், அந்தப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத, பதிவெண் பட்டியல் வழங்கவில்லை. அங்கீகாரம் பெறுவதில் தாமதமானாலும், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், இன்னும் பதிவெண் பட்டியல் வழங்கவில்லை; அதுவும் விரைந்து தீர்க்கப்பட்டு, அனைவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்