அழகப்பா பொறியியல் கல்லூரி மின்னியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில், மின்னியல் துறை சார்பில் தேசிய அளவிலான அல்கானசி என்ற கருத்தரங்கு துவங்கியது. இதில் பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குனர் சிவதாணு பிள்ளை பேசியதாவது: கி.மு., 5,000 முதல் கி.பி., 12- ம் நூற்றாண்டு வரை அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா முன்னோடியாக திகழ்ந்தது. அன்னியர் படையெடுப்பிற்கு பின், பொருளாதாரம், கல்வித் துறைகளில் பின்தங்கிவிட்டது. சுதந்திரம் பெற்ற பின் பசுமை, வெண்மை புரட்சி, ஐந்து ஆண்டு திட்டங்கள் மூலம் விவசாயம், பால்வள துறைகளில் வளர்ச்சி பெற்று விட்டது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தலைமையில் அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இந்த வளர்ச்சி பாதையை, இளைஞர் சமுதாயத்தினர் முன்னின்று வழி நடத்த வேண்டும். அதற்கு மாணவர்கள் தலைமைப் பண்பு பெற மாறுபட்ட சிந்தனை அவசியம். பிரமோஸ் ஏவுகணை மூலம் 5,000 கி.மீ., இலக்கை நிர்ணயித்து ஏவ முடியும். மாணவர்கள் (பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு துறை (டி.ஆர்.டி.ஓ.,) சார்பில் நடக்கும் தேர்வுகளில் பங்கேற்று, ஆராய்ச்சி துறைக்கு வரவேண்டும். வரும் 2025, 2050-ல் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்திருக்கும். மனித மூளையை செயற்கை சிப் மூலம் செயல்பட வைக்க முடியும். வெளிநாட்டிலிருந்து ரோபோ மூலம் அறுவை சிகிச்சைகளை இங்கு செய்ய முடியும். உடலில் சிப் வைத்து நோய்களை கண்டறிந்து அதை குணப்படுத்த முடியும். இவ்வாறு பேசினார். முதல்வர் மாலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் இளங்கோ, துறைத் தலைவர் ஜெபசல்மா பங்கேற்றனர்.