சூப்பர் பவர் இருப்பதாக கருதி மாடியில் இருந்து குதித்த மாணவர் !
கோவை : தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக கூறி, கல்லுாரி விடுதி மாடியில் இருந்து குதித்த மாணவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் பிரபு, 19. கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி விடுதியில் தங்கியிருந்து, பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.தன்னுடன் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களிடம், எனக்கு சூப்பர் பவர் இருக்கிறது. எவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தாலும் காயம் ஏற்படாது; பாதுகாப்பாக குதிக்கும் திறன் இருக்கிறது என கூறியுள்ளார்.மேலும், தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்திருப்பதாவும், அதனால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தனது நண்பர்களுடன் விடுதி நான்காம் மாடியில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் கீழே குதித்தார். இதில் அவரது கால், கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சக மாணவர்கள், பிரபுவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.தகவல் அறித்து சென்ற போலீசார், மாணவரின் மொபைல் போனை கைப்பற்றி விசாரித்தனர். அவர், அதிகாலையில் விடுதி கட்டட உயரத்தை வீடியோ எடுத்திருந்ததும், கடும் மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்தது. மொபைலில், சூப்பர் ஹீரோ வீடியோக்களை பார்த்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.