உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் வலுவடையும் இந்தியா - நேபாள உறவு; ஜெய்சங்கர்

புதுடில்லி: ஸ்டார்ட் - அப்கள், ஏ.ஐ., தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளினால் இந்தியா - நேபாள உறவை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.டில்லியில் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அப்போது, அவர் பேசியதாவது: இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மிகச்சிறப்பான உறவு உள்ளது. இது பகிரப்பட்ட கலாசார மற்றும் மத மரபுகள் ஆகியவற்றின் வலுவான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், வணிகம், முதலீடுகள், எரிசக்தி, வளர்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு உறவுகள் சீராக வளர்ந்துள்ளன. ஆனால் இன்று, ஸ்டார்ட் - அப்கள், ஏ.ஐ., தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற புதிய துறைகளிலும் இந்த உறவை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.மேற்கு ஆசியாவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான சூழ்நிலையிலும், நேபாளத்திற்கு தடையற்ற எரிபொருள் விநியோகத்தை நாம் உறுதி செய்துள்ளோம். இந்தியா - நேபாள உறவுகளின் பாதையை மாற்றியமைக்க இன்று ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம். இன்றைய சந்திப்பு இந்த இலக்கை நோக்கி நாம் முன்னேற உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்