பல்கலை., பதிவாளர் பதவியை நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவியை உடனடியாக நிரப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் நிதி அதிகாரி போன்ற 13 உயர் பதவிகள் உள்ளன. இந்த பணிகளை நிரந்தரமாக நிரப்பாமல் பொறுப்புகள் அடிப்படையில் கவனிக்கப்பட்டு வந்தன.அதையடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்களான ஊழியர் நல சங்கத்தின் சார்பில், 2022ல் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் பல்கலைக்கழகத்தில் பல உயர் பதவிகள் நிரப்பாமல் பொறுப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன.குறிப்பாக பதிவாளர் பதவி 10 ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. இப்பதவியை நிரப்பக் கோரி துணை வேந்தர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரும் பதிவாளர் பதவிகளை நிரப்பவில்லை. எனவே ஐகோர்ட் தலையிட்டு பதிவாளர் பதவியை நிரப்ப உத்தரவிட வேண்டும் என, கூறப்பட்டு இருந்தது.நிலுவையில் இருந்த இந்த வழக்கை கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள பதிவாளர் பதவியை உடனடியாக நிரப்ப உத்தரவு பிறப்பித்து, வழக்கை வரும் ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்த தீர்ப்பு தற்போது கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிரந்தர பதிவாளர் விரைவில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளார்.