மாணவர்களுக்காக சிறப்பு பஸ்களை இயக்குங்க தேசிய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
திண்டுக்கல்: பள்ளி வேலைநாட்களில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் பஸ் என்ற பெயரில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதன் சங்க மாநில துணைத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாவது : அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்சில் இலவச பஸ் பாஸ் மூலம் பயணம் செய்கிறார்கள். காலை , மாலை நேரங்களில் பஸ்களில் அதிக அளவில் கூட்டம் நிரம்பி வழிவதால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்வதும், பல மாணவர்கள் விபத்தில் சிக்குவதும் தொடர்கிறது. இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க நகர்ப்புறங்களில் முக்கிய வழித்தடங்களில் காலை,மாலை நேரங்களில் மாணவர்கள் பஸ் என்ற பெயரில் மாணவர்களே செல்லும் வகையில் பஸ்களை இயக்க வேண்டும். இதனால் நெரிசல் குறைவதோடு மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்கு சென்று வர இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.