பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க கோவை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்
கோவை: கல்லுாரி மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை துவக்கி வைக்க, வரும், 9ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லுாரியில் சேர்ந்த மாணவியருக்கு, மாதாந்திர உதவித்தொகை 1,000 ரூபாய் வழங்குவதை போல, தேர்தல் முடிந்ததும் கல்லுாரி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என, வாக்குறுதி கொடுத்தார்.அவ்வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழ்ப் புதல்வன் என, திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துவக்கி வைக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும் 9ம் தேதி கோவை வருகிறார். கோவை அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், இவ்விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.உக்கடம் - ஆத்துப்பாலம் வரை கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, அன்றைய தினம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்து வைக்கிறார். லாலி ரோடு சந்திப்பில் உயர்மட்ட பாலம் மற்றும் செம்மொழி பூங்கா வளாகத்துக்குள் கலைஞர் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.பின், வ.உ.சி., பூங்கா அருகே மாநகராட்சி கட்டியுள்ள, உணவு வீதியை துவக்கி வைக்கிறார். கடலைக்கார சந்தில் ஆதரவற்றோர் தங்கும் விடுதி மற்றும் புலியகுளம் அரசு மகளிர் கல்லுாரிக்கு கட்டப்பட்ட புதிய கட்டடத்தை, திறந்து வைக்க உள்ளார்.