செலவழிக்கும் ஒவ்வொரு காசையும் இரண்டரை மடங்காக திருப்பி தரும் இஸ்ரோ
புதுடில்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அதன் தயாரிப்புக்கு செலவழிக்கும் ஒவ்வொரு காசுக்கும், இரண்டரை மடங்காக, இந்திய பொருளாதாரத்துக்கு திருப்பி அளிப்பதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டதை ஒட்டி, இந்திய விண்வெளி திட்டங்களின் சமூக பொருளாதார தாக்கம் குறித்த பகுப்பாய்வு என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. விண்வெளி துறை சார்ந்த ஆலோசனை நிறுவனங்களான எகோ ஒன் மற்றும் யூரோ கன்சல்ட், இதுகுறித்து பல்வேறு தகவல்களை திரட்டி, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.வளர்ந்த நாடுகள் உட்பட, உலகின் பிற நாடுகளின் விண்வெளி அமைப்புகளுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த பட்ஜெட்டிலேயே இயங்கும் இஸ்ரோ, இதனை பயன்படுத்தியே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.எடுத்துக்காட்டாக, கடந்தாண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், வெறும் 615 கோடி ரூபாயில் அனுப்பப்பட்டது என்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.இந்நிலையில், இஸ்ரோவின் செயல்பாடுகள் குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இஸ்ரோ, அதன் தயாரிப்புக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு காசுக்கும், இரண்டரை மடங்காக, இந்திய பொருளாதாரத்துக்கு திருப்பி அளித்து உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில், விண்வெளி திட்டங்களில், இஸ்ரோ கிட்டத்தட்ட 1.08 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.அதே போல கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், நேரடி, மறைமுகம் மற்றும் அதன் செயல்பாடுகளின் விளைவாக இஸ்ரோ, இந்திய பொருளாதாரத்துக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் பங்களிப்பை வழங்கியுள்ளது.இதுமட்டுமல்லாமல், நாட்டில் 47 லட்சம் வேலைவாய்ப்புகளையும் இஸ்ரோ உருவாக்கியுள்ளது. தற்போதைய மதிப்பீட்டின் படி, பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் வாயிலாக 96,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.