உள் ஒதுக்கீடு கண்காணிக்க குழு மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம்
நாமக்கல்: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு கண்காணிக்க, தமிழக அரசு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என, மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பெஸ்ட் அமைப்பின் மாநில தலைவர் ரவி, பொதுச்செயலாளர் ராஜா, பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண்டர் உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பதவி உயர்வில், எஸ்.சி.ஏ., எஸ்.சி., எஸ்.டி., இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்.எஸ்.சி.ஏ., எஸ்.சி., எஸ்.டி., 10,000க்கும் மேற்பட்ட பின்னடைவு பணியிடங்களை, தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்ட, எஸ்.சி.ஏ., மூன்று சதவீத உள் ஒதுக்கீடு முறையாக, முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு கண்காணிக்க, தமிழக அரசு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.