குரு பவுர்ணமி கொண்டாட்டம் வேதம் படிக்கும் மாணவர்கள் கவுரவிப்பு
தொம்மலுார்: குரு பவுர்ணமியை ஒட்டி, நேற்று வேத பாடசாலையில் படிக்கும் மாணவர்களும், விபூதிபுரா வீரசிம்மாசன சமஸ்தானத்தில் படிக்கும் மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம், ஸ்ரீசாதுராம் சுவாமிகளின் 25ம் ஆண்டு ஆராதனை இரண்டாம் பாகம் விழா, நேற்று நடந்தது.காலையில், உலக நன்மைக்காக மஹா மிருஞ்செய ஹோமம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து 260 வேத அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாலையில் பெண்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர்.அதை தொடர்ந்து இரவில் நடந்த ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதர், உபன்யாசம் நிகழ்த்தினார். இதில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, உபன்யாசத்தை கேட்டு மகிழ்ந்தனர்.குரு பவுர்ணமியான நேற்று அறக்கட்டளை சார்பில் நகரின் பல்வேறு பகுதியில் உள்ள வேத பாடசாலையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர்.அதுபோன்று, விபூதிபுராவில் உள்ள வீர சிம்மாசன சமஸ்தானம் மடத்தில் வேதம் படிக்கும் 225 மாணவர்கள், பஸ்சில் அழைத்து வரப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.