குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு: இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை
திருத்தணி: அரசு பள்ளி மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் வழக்கு பதியப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் திருத்தணி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பேருந்துகள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.சில மாணவர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது, படிகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடியும், பேருந்து கூரையில் ஏறியும், ஜன்னல் கம்பிகளை பிடித்தும் பயணம் செய்கின்றனர்.இதுதவிர மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கியப்படி பயணம் செய்வதிலும் இடையே வாக்கு வாதம் மற்றும் அடிதடியும் அவ்வப்போது நடக்கிறது.இந்நிலையில் திருத்தணியில் நேற்று முன்தினம் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு மாணவன் படுகாயம் அடைந்தார்.இதையடுத்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், காலை இறைவணக்கத்தின் போது பள்ளிக்கு வந்தார்.அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். கல்வி கற்றால் தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். மாணவர்கள் ஒழுக்கத்துடன் பள்ளிக்கு வந்து படிக்க வேண்டும்.இதை தவிர்த்து, மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், தேவைப்பட்டால் கைது செய்யப்படுவார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் வீணாவதுடன், எந்த அரசு பணிக்கும் செல்ல முடியாது. எனவே மாணவர்கள் காலத்தை வீணாடிக்காமல் கல்வி கற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.