உள்ளூர் செய்திகள்

விதிமுறைகள் ஒத்துவராததால் சுயநிதியில் இயங்க முடிவு: சென்னை சமஸ்கிருத கல்லுாரி

சென்னை: “சென்னை சமஸ்கிருத முன்னாள் பொறுப்பு முதல்வர் அருணசுந்தரம் மீது, எங்களுக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மத்திய சமஸ்கிருத பல்கலை விதிமுறைகள் ஏற்புடையதாக இல்லாததால், சுயநிதியில் இயங்க முடிவு செய்தோம்,” என, சென்னை சமஸ்கிருத கல்லுாரி இயக்குநர் ரமேஷ் மகாலிங்கம் தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூரில் உள்ள, சென்னை சமஸ்கிருத கல்லுாரி, 120 ஆண்டுகளாக கல்வி சேவை செய்து வருகிறது. ஆரம்பத்தில் சுயநிதியில் செயல்பட்டுவந்த கல்லுாரி, கடந்த 50 ஆண்டுகளாக, புதுடில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலை நிதியின் கீழ் இயங்கி வந்தது.திடீரென, பல்கலை உடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, மீண்டும் சுயநிதியின் கீழ் இயங்குவதாக, அக்கல்லுாரி அறிவித்துள்ளது.'கல்லுாரியின் இந்த முடிவால், போதிய ஊதியம் கிடைக்காமல் பேராசிரியர்கள், மத்திய சமஸ்கிருத பல்கலையின் பிற மாநில கல்லுாரிகளுக்கு மாறிவிடுவர். மாணவர்களுக்கு, தேசிய போட்டிகள் மற்றும் கல்வி அனுபவ வாய்ப்புகள் கிடைக்காது' எனக்கூறி, சமீபத்தில் அக்கல்லுாரி மாணவர்கள் அமைதி வழியில் போராடினர்.இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன், பொறுப்பு முதல்வர் அருணசுந்தரம் நீக்கப்பட்டு, பேராசிரியர் ஹரிஹரனை பொறுப்பு முதல்வராக, கல்லுாரி நிர்வாகம் நியமித்தது.இது குறித்து, சென்னை சமஸ்கிருத கல்லுாரியின் இயக்குநர் ரமேஷ் மகாலிங்கம் கூறியதாவது:கல்லுாரியை நிர்வாகத்தினரே நடத்த வேண்டும்; நிலத்தை யாருக்கும் விற்க அதிகாரம் இல்லை என, கல்லுாரி நிறுவனர் குறிப்பிட்டுள்ளார். மத்திய சமஸ்கிருத பல்கலை துவங்கி 50 ஆண்டுகளே ஆகிறது. விதிமுறைகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது.இது வரை, 95 சதவீத நிதி அளித்த பல்கலை நிர்வாகம், 'இனி 100 சதவீத நிதி தருகிறோம். கல்லுாரி நிலங்களை ஒப்படையுங்கள். நிர்வாகத்தை நாங்களே மேற்கொள்கிறோம்' எனக்கூறி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட நெருக்கடி தந்தது. இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இவை, கல்லுாரி நிறுவனரின் விதிக்கு முரண்பாடானவை.எனவே, மத்திய சமஸ்கிருத பல்கலை உடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்தோம். அதன்படி, இம்மாதத்துடன் ஒப்பந்தம் முடிகிறது.கல்லுாரின் முன்னாள் பொறுப்பு முதல்வர் அருணசுந்தரத்தின் பணிக்காலம், இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார், அதை கல்லுாரி நிர்வாகம் ஏற்றது. அதன்படி, மார்ச்சில் அவரின் பணிகாலம் முடிவதால், புதிய பொறுப்பு முதல்வரை நியமித்துள்ளோம். அருணசுந்தரம் மீது, எங்களுக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை.சுயநிதியில் கல்லுாரி இயங்குவதால், மாணவர்களின் கல்வி எதிர்காலத்திற்கு எந்த பாதிப்பும் வராது. புதுப்புது பாடத்திட்டங்களை கொண்டு வர உள்ளோம். மாணவர்கள் நலனுக்கு தேவையானதையே பிரதானமாக செய்வோம்.சுயநிதி வாயிலாக பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவோம். ஓரிரு ஆண்டுகளில் அவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கல்லுாரி முடிவில் தலையிட முடியாது பல்கலைக்கு என சில விதிமுறைகள் உள்ளன. அதன்படியே, சென்னை சமஸ்கிருத கல்லுாரியை அணுகினோம். கல்லுாரியின் நிர்வாக விதிப்படி, அவர்களுக்கு உடன்பாடு இல்லை. பல்கலையின் கீழ் இயங்கும் பிற கல்லுாரிகளுக்கு, இதே விதிமுறை தான் விதித்துள்ளோம். பல்கலை நிதி வேண்டாம் என, விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. சென்னை சமஸ்கிருத கல்லுாரி முடிவில் நாங்கள் தலையிட முடியாது.-ஸ்ரீனிவாசா வரகேடி, துணைவேந்தர், மத்திய சமஸ்கிருத பல்கலை, புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்