உள்ளூர் செய்திகள்

வேளாண் துறை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வில்...  முறைகேடு?ஒரே மையத்தில் 200க்கு 200 எடுத்த 74 பேரால் சந்தேகம்

பெங்களூரு: இளங்கலை வேளாண் பட்ட படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, மாநிலம் முழுதும் கடந்த 10ம் தேதி நடந்தது. இதில், சித்ரதுர்காவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 74 பேர், 200க்கு 200 மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், நுழைவுத்தேர்வில் முறைகேடு நடந்ததா என, பெற்றோர் கேள்வி எழுப்பி உள்ளனர். மருத்துவ இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுதும் நடந்தது. வினாத்தாள் கசிவு காரணமாக இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இவ்விஷயத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட காங்., தலைவர்கள், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர்.இதற்கு, மத்திய கனரக தொழில் துறை அமைச்சரும், ம.ஜ.த., மாநில தலைவருமான குமாரசாமி சுடச்சுட பதிலடி கொடுத்தார். 'கர்நாடக அரசு தேர்வாணையம் நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை மாநில அரசு முதலில் ஒழுங்கு செய்யட்டும். பின்னர், மத்திய அரசை குறை கூறலாம்' என்றார்.இவரது வார்த்தைகளுக்கு உயிரூட்டும் விதமாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. தேர்வாணையம் அதாவது, கே.இ.ஏ., எனும் கர்நாடகா தேர்வாணையத்தால் பல்வேறு பட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆணையம் முறையாக தேர்வுகளை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.இந்நிலையில், இளங்கலை வேளாண் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த 10ம் தேதி மாநிலம் முழுதும் நடந்தது. இத்தேர்வை கே.இ.ஏ.,வே நடத்தியது. மாநிலம் முழுதும், 17 மையங்களில் தேர்வு நடந்தது. பி.யு., 2ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வை எழுதினர்.98 மாணவர்கள் இத்தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அரசு கல்லுாரியில், 'சீட்' கிடைக்கும். தனியார் கல்லுாரியில் குறைந்த கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.இத்தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வில், தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விதைகளை மாணவர்கள் கண்டறிந்து சொல்ல வேண்டும். மேலும், விவசாய உபகரணங்களையும் கண்டறிந்து சொல்ல வேண்டும். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தனித்தனியே வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன.இத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில், 98 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர். சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தேர்வு மையத்தில், தேர்வு எழுதிய 74 பேர், 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர். மீதமுள்ள மையங்களில் வெறும் 24 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றனர்.இது தற்போது பெற்றோர், மாணவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஹிரியூர் மையத்தில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் முறைகேடு நடந்ததா என்ற கேள்வி எழுந்து உள்ளது.மறுதேர்வு? 'இவ்விஷயத்தில், மாநில அரசு விரைந்து விசாரிக்க வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என்றும் பெற்றோர் கூறுகின்றனர்.சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல, இந்த தேர்வும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து, ஹூப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் கூறியதாவது:மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதை கே.இ.ஏ., உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஹிரியூர் மையத்தில் நடந்த முறைகேடு குறித்து மாநில அரசு விசாரிக்க வேண்டும்.இவ்விஷயத்தில் வெளிப்படையான விசாரணை வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும். நடந்து முடிந்த தேர்வு செல்லாது என அறிவித்து, மறுத்தேர்வுக்கான தேதி விரைந்து அறிவிக்கப்பட வேண்டும். கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்