கல்வி கட்டணம் உயர்த்த அனுமதி: பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சி
பெங்களூரு: பட்டப்படிப்பு கல்விக் கட்டணத்தை, 10 சதவீதம் உயர்த்திக் கொள்ள, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உயர்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.கர்நாடகாவில் ஆட்சி அமைந்த பின், பால் விலை, மது பானங்கள் விலை, மின்சாரக் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்தி, மக்களுக்கு தொடர்ந்து காங்கிரஸ் சுமை ஏற்படுத்தி வருகிறது.இதற்கிடையில், பட்டப் படிப்பு கல்விக் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, தனியார் கல்வி நிறுவனங்கள், அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. இதன் அடிப்படையில், 2023 - 24 கல்வி ஆண்டு முதலே கல்லுாரி, பல்கலைக்கழகங்களில், பட்டப் படிப்பு கல்விக் கட்டணத்தை, 10 சதவீதம் உயர்த்திக் கொள்ள, உயர்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.அதன்படி அனைத்து வகை இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.பி.யு.சி., படிப்பு முடித்துவிட்டு, பட்டப் படிப்பு படிக்க சேர்ந்துள்ள மாணவர்கள், கூடுதல் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளது.பாதி கல்வி ஆண்டு முடிவதற்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், திடீரென கட்டணத்தை உயர்த்தியது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.