அரசு பள்ளிகளுக்கு பல மடங்கு எகிறியது மின் கட்டணம்
மதுரை: தமிழகத்தில் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் ஹைடெக் லேப் வசதியால் மின்கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பழைய அளவு தான் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது என தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.தமிழகத்தில் 5700க்கும் மேற்பட்ட உயர்நிலை, 8100க்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் ஹைடெக் லேப்கள் செயல்பாட்டில் உள்ளது. உயர்நிலையில் தலா 10 கம்ப்யூட்டர்கள், ஒரு புரஜெக்டர், மேல்நிலை லேப்பில் தலா 20 கம்ப்யூட்டர்கள், புரஜெக்டர்கள், ஏசி வசதி, 24 மணிநேரம் நெட் இணைப்பு, சர்வர் செயல்படுவது போன்ற வசதிகள் உள்ளன. மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு, ஆசிரியர்களுக்கு வீடியோகான்பிரன்சிங் மூலம் பயிற்சிகள் போன்றவை இவ்வகை லேப்களில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.பள்ளிகளுக்கு இதுவரை இருந்த மின்கட்டணம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் ஹைடெக் லேப் வசதி இல்லாத போது வழங்கப்பட்ட மின்கட்டணத்தையே அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதனால் தலைமையாசிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.அரசே ஏற்க வேண்டும்தலைமையாசிரியர்கள் கூறியதாவது: மின் கட்டணத்தை உயர், மேல்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் முன்கூட்டியே செலுத்தி, அரசு நிதி ஒதுக்கியவுடன் அதில் இருந்து பெற்றுக்கொள்வோம். லேப் வருவதற்கு முன் ஒரு பள்ளிக்கு ரூ. 3 முதல் 5 ஆயிரம் இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து விட்டது. ஆண்டுதோறும் இரண்டு கட்டமாக மின் கட்டணத்தை அரசு வழங்குகிறது. கடைசியாக ஒதுக்கிய நிதி பல ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளது.ஆனால் அப்பணத்தை தலைமையாசிரியர்கள் செலுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். மனஉளைச்சலாக உள்ளது. அரசு பள்ளிக்கு ஆகும் மின்செலவை அரசே செலுத்த முன்வர வேண்டும் என்றனர்.மதுரையில் 3 நாளே அவகாசம்மதுரையில் அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மின் கட்டணத் தொகை பிப்.,20ல் தான் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டது. 23க்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெறப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஜூனில் வந்த நிதியை இவ்வளவு தாமதமாக பள்ளிகளுக்கு விடுவித்து விட்டு மூன்று நாட்கள் அவகாசம் என அதிகாரிகள் உத்தரவை ஏற்கமுடியாது என தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.