பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் இடம் பெற வழக்கு
மதுரை: தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் இடம் பெற தாக்கலான வழக்கில், மனுவை தமிழக அரசு பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை செந்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. பல வளர் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாலும், வெளியில் சொல்லத் தயங்குகின்றனர்.அதற்கு சட்ட உரிமை குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம். கேரள அரசின் பள்ளிப் பாடத்திட்டத்தில் குழந்தைகளின் உரிமைகள், அவசர உதவிக்கு போலீஸ் மற்றும் நிர்பயா இலவச உதவி எண் இடம் பெற்றுள்ளன.தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள், கடமைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், அவசர உதவிக்கு சைல்டு ஹெல்ப் லைன், போலீஸ் உதவி எண் இடம் பெற நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் விரைவில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.