பள்ளி வாகனங்கள் ஆய்வு துவக்கம் ஒரே நாளில் 370 வாகனங்களுக்கு ஓகே
புதுச்சேரி: பள்ளி, கல்லுாரி வாகனங்களில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து துறை சார்பில் பள்ளி கல்லுாரி வாகனங்கள் ஆய்வு 2 நாள் முகாம், மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையத்தில் நேற்று துவங்கியது.போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் முகாமை துவக்கி வைத்தார்.வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 4 குழுவினர் வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது, வாகனத்தில் முதலுதவி பெட்டி, அவசர காலவழி, தீயணைக்கும் கருவி, வேககட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ். கருவி, உள்ளிட்ட 16 விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.ஆணையர் சிவக்குமார் கூறுகையில், புதுச்சேரியில் 800, காரைக்காலில் 50, மாகி 25, ஏனாமில் 25 என மொத்தம் 900 கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் உள்ளன. அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் 78 இயக்கப்படுகிறது. முதல் நாள் முகாமிற்கு 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன.முகாமில் பங்கேற்காத வாகனங்கள் அடுத்த வாரம் ஆய்வு செய்வோம். அதன் பிறகும் ஆய்வுக்கு வராத வாகனங்களை அவர்களின் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்வோம் என்றார்.