தினமலர் செய்தியால் விமோசனம் பெற்ற மாதிரிப் பள்ளி
சேலம்: &'தினமலர்&' செய்தி எதிரொலியால், கொங்கணாபுரம் மாதிரி பள்ளிக்கு, ஆறு ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்து, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 18 ஒன்றியங்களில், மாதிரி பள்ளிகள் துவக்கப்பட்டன. இலவசமாக ஆங்கிலக்கல்வி என்பதால், இப்பள்ளிகளில் சேர மாணவ, மாணவியரிடையே ஆர்வம் இருந்தும், கடந்த ஓராண்டாக பள்ளிக்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யவில்லை. போதிய கட்டுமான வசதிகளும் இல்லாததால், கடந்த ஆண்டு இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்த்த பெற்றோர் விரக்தியடைந்தனர். சேலம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள மாதிரி பள்ளியில், 40 சீட்களுக்கு, 12 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம், &'தினமலர்&' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், உடனடியாக கொங்கணாபுரம் மாதிரி பள்ளிக்கு, ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர் என ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதை பெற்றோரிடம் அறிவித்து, மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாதிரி பள்ளிகளிலும், ஆசிரியர் நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கையில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.