உள்ளூர் செய்திகள்

சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலுக்கு தடை

சிறந்த சுயநிதி பொறியியல் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்ய வசதியாக, அதன் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டமைப்பு, வசதிகள், தேர்ச்சி விகிதம் ஆகியவற்றைக் கொண்டு சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கோவை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள் சங்கம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளின் கருத்தைக் கேட்காமலேயே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தரவரிசைப் பட்டியலை தயாரித்துவிட முடியாது. தேர்ச்சி என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். எனவே தேர்ச்சி அடிப்படையில் தர வரிசைப் பட்டியலை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிபிதர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு, தனியார் பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்