சிறந்த கைவினைஞர்களுக்கு மத்திய அரசு விருது வாய்ப்பு
சென்னை: சிறந்த கைவினைஞர்களுக்கான மத்திய அரசின் விருதுகளுக்கு, ஏப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கைவினை மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் கைவினைஞர்களுக்கு, மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய விருது, சில்ப குரு விருது, தேசிய சான்றிதழ் விருதுகளை வழங்கி வருகிறது. தேசிய விருதுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, தாமிர பட்டயம், அங்கவஸ்திரம், சான்றிதழ்;தேசிய தகுதி சான்றிதழுக்கான விருதிற்கு, 75 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை, சான்றிதழ்; சில்ப குருவிருதிற்கு தங்க நாணயம், தாமிர பட்டயம் மற்றும் மத்திய அரசின் சலுகைகள் கிடைக்கும். இதன்படி, 2015க்கான, விருதுக்கான விண்ணப்பங்கள் சென்னை, அண்ணா சாலையில் உள்ள இசைக்கருவிகள் வளர்ச்சி மையம், மாவட்டங்களில் உள்ள மாநில தொழில் மையங்கள், சேலம், நெல்லை, நாகர் கோவில், புதுச்சேரி கைவினை விற்பனை மற்றும் சேவை விரிவாக்க மையங்களிலும் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்., 30க்குள், சென்னை, அண்ணா சாலையில் உள்ள, தமிழ்நாடு கைவினை மேம்பாடு கழகமான பூம்புகார்; சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசின் கைவினை மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.