தேர்வு நிலை அங்கீகாரம் ரத்து: ஆசிரியர்கள் போர்கொடி
கோவை: ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறாதோருக்கு, பதவி உயர்வு வழங்கக்கூடாதென, ஐகோர்ட் மதுரை கிளையில் சிலர் தொடுத்த வழக்குக்கு ஆதரவாக, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வெளியானது. இதை எதிர்த்து சிலர், மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும், கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசாணை எதுவும் வெளியிடவில்லை. இந்நிலையில், கோவை மாவட்ட கல்வித்துறையில் மட்டும், டெட் முடிக்காதோருக்கு, தேர்வு நிலை அங்கீகாரம் வழங்க முடியாதென, கருத்துரு திருப்பி அனுப்பப்பட்டது. மற்ற மாவட்டங்களில் இந்நடைமுறை பின்பற்றாத பட்சத்தில், கோவையில் மட்டும் ஆசிரியர்களுக்கு எதிராக, கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுவதாக அதிருப்தி எழுந்தது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், நேற்று மாலை டவுன்ஹால், மாவட்ட கல்வி அலுவலகம் முன், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.