உள்ளூர் செய்திகள்

டிட்டோஜாக் உடன் பேச்சு தோல்வி ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை: ஆசிரியர்கள் சங்க அமைப்புடன், பள்ளிக் கல்வி அதிகாரிகள் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. அதனால், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் அக்., 13ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். எண்ணும், எழுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகளுக்காக, இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.இந்நிலையில், போராட்டத்தை தள்ளி வைக்கும் வகையில், டிட்டோஜாக் அமைப்பில் உள்ள, 11 சங்க நிர்வாகிகளுடன், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் இணை இயக்குனர்கள் நேற்று பேச்சு நடத்தினர். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான கோப்புகள் தயாராகிஉள்ளதாகவும், 3 மாதத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.இதை கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். ஏற்கனவே அறிவித்தபடி, அக்., 13ம் தேதி டி.பி.ஐ., வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, டிட்டோஜாக் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்