வேளச்சேரி பள்ளிகளில் கஞ்சா புழக்கம்: ஆசிரியர்கள் புகார்
வேளச்சேரி: அடையாறு மண்டலத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில், வேளச்சேரியில் மண்டல சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.மூன்று கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். சுகாதார துறையினர், தொற்றும் நோய், தொற்றா நோய்களை கண்டறிந்து குணப்படுத்த, பரிசோதனை, சிகிச்சை வழங்கப்படுகிறது. நலச்சங்கங்கள் தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க விரும்பினால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்றனர்.நலச்சங்கத்தினர் கூறுகையில், வேளச்சேரி, சேவா நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதை தடுக்க ஹோட்டல், தெருவோர சிற்றுண்டி கடைகளை உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரமான குடிநீர் வினியோகத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றனர்.வேளச்சேரி பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாங்கள் முடிந்தளவு பிடித்து கண்டிக்கிறோம். காவல் துறை, சுகாதாரத் துறை, போதை தடுப்பு பிரிவு சிறப்பு கவனம் செலுத்தி, மாணவர்களிடம் புழங்கும் போதை பொருட்களை தடுக்க வேண்டும் என கூறினர்.இதற்கு, காவல் துறை கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பதில் கூறினர்.