அஞ்சலகங்களில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம்
கரூர்: கரூர் அஞ்சல் கோட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம் நடக்கிறது என, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் அஞ்சல் கோட்டத்தில், அனைத்து அஞ்சலகங்களில் பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது சம்பந்தமாக, தமிழக அரசு மற்றும் இந்திய அஞ்சல் துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பள்ளியில் புதிய சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த சிறப்பு முகாமை, மாணவர்கள் பயன்படுத்தி தங்களுக்கான அஞ்சல் சேமிப்பு கணக்கு அல்லது இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி கணக்கை தொடங்கி கொள்ளலாம். கணக்கு தொடங்க வைப்பு தொகை இல்லை. சேமிப்பு கணக்கு தொடங்க, 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள், தங்களின் ஆதார் அட்டை, பிறப்பு சான்று, பெற்றோர் ஆதார் அட்டையுடன், இரண்டு பாஸ்போர்ட் போட்டோ கொண்டு வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆதார் அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.