தற்செயல் விடுப்பு போராட்டம் ஊதியத்தை பிடிக்க முடிவு
சென்னை: தற்செயல் விடுப்பு எடுத்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய, 1.05 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய, நிதித்துறை அனுமதி கேட்டுள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; சரண் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். கடந்த 25ம் தேதி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அன்று, 1.05 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணிக்கு செல்லாமல் தற்செயல் விடுப்பு எடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு சட்ட விதிகளின்படி, முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்தவர்களின், ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய, நிதித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.