உள்ளூர் செய்திகள்

அட்டகட்டிக்கு இயற்கை நடைபயணம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆர்வம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசுப்பள்ளி மாணவர்கள், இயற்கை நடைப்பயணமாக அட்டகட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், பள்ளி கல்வித்துறை சார்பில், தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கான இயற்கை நடைபயண முகாம், அட்டகட்டியில் நடந்தது.முகாமினை, சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். பசுமை தோழி வாசுகி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி கல்வி மாவட்ட ஆய்வாளர்கள் கோவிந்தன், கதிரேசன், பிஜூ ஆகியோர் பங்கேற்றனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும், 10 பள்ளிகளில் இருந்து, 100 மாணவர்கள், 10 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அட்டகட்டி வனபயிற்சி மைய வன அதிகாரி ரஞ்சித், வனவளம், பல்லுயிர் பெருக்கம், விலங்குகள், பறவைகள் ஆகியவை மனிதனுக்கும், இயற்கைக்கும் எந்தளவுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது என விளக்கமளித்தார்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், முகாமின் நோக்கம் குறித்து விளக்கினார். மேலும், மாணவர்கள், இயற்கையும், பறவைகள், விலங்குகளை பாதுகாக்க என்னென்ன சிறிய அளவிலான செயல்கள் செய்ய வேண்டும் என்றும், நெகிழிப்பை ஒழிப்பின் அவசியம் குறித்தும் விளக்கினார்.பசுமை தோழி, அரசின் சுற்றுச்சூழல் துறையின் முன்னெடுப்புகள், நமது உடல்நலத்தை பேணுவதில் சுற்றுச்சூழலின் பங்கு குறித்து விளக்கினார். வனவர் நிகழ், படம் பார்த்து பதில் சொல் என்ற நிகழ்ச்சியும், வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ப்ரீத்தி முதல் பரிசும், திவான்சாபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அபினேஷ் இரண்டாம் பரிசும் பெற்றனர். மேலும், முகாமிற்கான ஒருங்கிணைப்பு பணிகளை அதிகாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்