திண்டுக்கல்லில் பள்ளி மாணவிகளை சிரமப்படுத்திய தி.மு.க.,பொங்கல் விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் பழைய கோர்ட் ரோட்டில் தி.மு.க.,வினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா பள்ளி மாணவிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்ட, மாநகர் தி.மு.க., சார்பில் சமத்துவப்பொங்கல் விழா, அமைச்சர் பெரியசாமி பிறந்தநாள் விழா பழைய கோர்ட் ரோட்டில் நடந்தது.இதற்காக தி.மு.க., அலுவலகம் முன்பு மேடை , அருகில் உள்ள மகளிர் பள்ளி வாசலை மறித்து கரும்பு அலங்கார தோரணங்கள், ஸ்பீக்கர்கள், இரும்புத்தடுப்புகள், சாமியானா, சேர்கள் என என ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அரசியல் பேச்சு, பாட்டு, வாழ்த்து கோஷங்கள் என களைக்கட்டிய சமத்துவ பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கட்சியினரின் இந்த விழா ஏற்பாடுகள் அருகில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தின. ஸ்பீக்கர்களின் அதிக ஒலியால் படிப்பில் கவனச்சிதறல் ஏற்பட பள்ளி ஜன்னல்கள் இழுத்து மூடப்பட்டன. பொதுநல ஆர்வலர்கள் கூறுகையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடக்கும் நேரம் இது.ஆயிரக்கணக்கானனோர் படிக்கும் பள்ளியின் வாசலை மறித்து பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.விடுமுறை நாளில் இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கலாம்.பள்ளி நேரத்தில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் மாணவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதை கட்சியினர் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும்' என்றனர்.