பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் அவசியம்
திருப்புவனம்: அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள், அவசர கால பயிற்சிகள் வழங்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிராமப்புற ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரின் குழந்தைகள் அதிகளவில் கல்வி பயில்கின்றனர். வீடுகளில் இருந்து தனியாகவே கிளம்பி பள்ளி வந்து மாலையில் வீடு திரும்புகின்றனர். பெரும்பாலான மாணவ, மாணவியர்கள் தினசரி 30 கி.மீ., தூரம் வரை பயணம் செய்கின்றனர்.சாலைகளை கடப்பது, சாலை விதிகளை பின்பற்றுவது, சாலை விபத்து போன்றவற்றில் முதல் உதவி சிகிச்சை செய்வது.தீ விபத்து காலங்களில் உயிர் தப்புவது போன்ற அடிப்படை விஷயங்கள் எதுவுமே தெரியாமலேயே உள்ளனர். பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வாரம், சுற்றுச்சூழல் வாரம், தொற்று நோய் விழிப்புணர்வு உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த துறை அதிகாரிகள் பெயரளவில் ஊர்வலம், விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவற்றை நடத்துகின்றனர். இதனால் மாணவ, மாணவியர்களுக்கு எந்த பயனும் இல்லை.திருப்புவனம் வட்டாரத்தில் 65 தொடக்கப் பள்ளிகள், 35 நடுநிலைப் பள்ளிகளில் 2,451 மாணவர்களும், 2,523 மாணவிகளும் கல்வி பயில்கின்றனர்.இது தவிர திருப்புவனம் வட்டாரத்தில் எட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.திருப்புவனம் பெண்கள் பள்ளியில் இரண்டாயிரம் மாணவிகளும், ஆண்கள் பள்ளியில் 853 மாணவர்களும் கல்வி பயில்கின்றனர். பள்ளி வேலை நேரம் முடிவதற்கு முன்பே பெரும்பாலான ஆசிரியர்கள் கிளம்பி விடுகின்றனர்.மாணவ, மாணவியர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிவிட்டனரா, சாலைகளை கடந்துவிட்டனரா என கண்டுகொள்வதே இல்லை.பெற்றோர்கள் தரப்பில் கூறியதாவது, பள்ளிகளில் குறிப்பிட்ட காலங்களில் ஒரு சில மாணவ, மாணவியர்களை மட்டும் அழைத்து பேரணி நடத்தி முடிக்கின்றனர்.சாலை விதிகள் குறித்து முழுமையாக அவர்கள் தெரிந்து கொள்வதே இல்லை.பள்ளிகளில் முதல் உதவி பெட்டிகள், அதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதும் இல்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.