கலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் மூலம் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடந்தது. இதில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய 5 - 8, 9 - 12, 13 - 16 என வயதுக்கேற்ப மூன்று பிரிவுகளின் கீழ் நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலை போட்டியினை மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் ராஜாராமன் துவக்கி வைத்தார்.போட்டிகளுக்கு புருஷோத்தமன், ரத்தினவேல், ரித்தி, அரவிந்தன், அமுதன், சூர்யா, சந்திரசேகரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இக்கலை போட்டிகளை தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரிய உதவியாளர் வடிவேல், சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவல் கவுதம், சிலம்பம் ஆசிரியர் செல்வம், பரதநாட்டிய ஆசிரியர் சாய் ரமணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.அதே போல், உலக ஓவிய தினத்தை முன்னிட்டு கலை ஓவியப் பயிற்சி நடந்தது. இதில் கள்ளக்குறிச்சியைச் சார்ந்த 250 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். ஓவிய ஆசிரியர்கள் அரவிந்தன், அமுதன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து ஓவிய படைப்புகளை கண்காட்சியாக வைத்து மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.