உள்ளூர் செய்திகள்

இன்று எஸ்.எஸ்.எல்.சி., ரிசல்ட் ஹிந்திக்கு மதிப்பெண் உண்டு

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. ஹிந்தி பாடத்திற்கு மதிப்பெண் வழங்கும் முறை தொடரும் என்று, பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா அறிவித்து உள்ளார்.கர்நாடகாவில் கடந்த மாதம் 18ம் தேதி துவங்கிய எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள், இம்மாதம் 2ம் தேதி நிறைவு பெற்றது.மாநிலம் முழுதும் 2,871 தேர்வு மையங்களில் 9.02 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த பின், மூன்றாம் மொழி பாடமான ஹிந்திக்கு மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிரேடுக்கு பதிலாக மதிப்பெண் வழங்கும் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.இந்நிலையில், நேற்று முதல்வரை சந்தித்து பேசிய பின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறுகையில், “எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் நாளை (இன்று) மதியம் 12:00 மணிக்கு அறிவிக்கப்படும்.ஹிந்தி பாடத்திற்கு மதிப்பெண்ணிற்கு பதிலாக கிரேடு வழங்கும் விஷயத்தில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது என்று, முதல்வருடன் நடந்த சந்திப்பின் போது முடிவு எடுக்கப்பட்டது,” என்றார்,இன்று மதியம் 12:00 மணிக்கு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக பள்ளி தேர்வாணையம் மற்றும் மதிப்பெண் வாரிய அலுவலகத்தில், அமைச்சர் மது பங்காரப்பா தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.முடிவுகளை https://karresults.nic.in என்ற இணைய முகவரியில் பார்த்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை https://www.digilocker.gov.in என்ற இணைய முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாணவர்களின் மொபைல் போனுக்கு குறுந்தகவல் மூலமும், தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்