இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு வரலாறு ஆசிரியர் நியமனம்
மதுரை: 6 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் இனி வரலாற்றுப் பாட (பட்டதாரி) ஆசிரியர்களையும் நியமிக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 வரையுள்ள வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பணியிடம் ஓய்வு, இறப்பு, பதவிஉயர்வு போன்ற காரணங்களால் காலியாகும்போது, பட்டதாரி ஆசிரியர்களால் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான அரசாணை (எண். 100)யின்படி இப்பணியிடங்களில் ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாட ஆசிரியர்களே நியமிக்கப்பட்டனர். பின்னர் வெளியிடப்பட்ட ஆணையின் (எண். 244)படி கணிதம் ஆங்கிலம், அறிவியல் என்ற வரிசையில் பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டனர். இதில் தமிழ் மற்றும் வரலாற்று (சமூகஅறிவியல்) பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதனால் இந்த பாடங்களுக்கு ஆசிரியர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை சுட்டிக் காட்டிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர், அனைத்து பாட ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 6, 7, 8ம் வகுப்புகளில் தமிழ், வரலாறு (சமூகஅறிவியல்) பட்டதாரி ஆசிரியர்களையும் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள உத்தரவில் (எண். 144, நாள்: 4.7.2008) கூறியிருப்பதாவது: அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வரை வகுப்புகளை ஒரே அலகாகக்(யூனிட்) கொண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், நிரந்தரமாக காலியேற்படும்போது, பள்ளியின் தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றம் செய்திட சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. ஒருமுறை பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல்) பணியிடம் முதன்மை கல்வி அலுவலரால் நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர், அது எக்காரணம் கொண்டும் எதிர்காலத்தில் மாற்றப்படக் கூடாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.